எதையும் இறக்கிவைக்க முடியவில்லை
பளு கூடிக்கொண்டே வருகிறது
என் கழுத்தும் தோள்களும் வலிக்க
சுமப்பதில் எனக்குச் சம்மதந்தான்
ஆனால் எவ்வளவு காலத்துக்கு?
தெரியாது.
என்றேனும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு
என் தண்ணீர்க் கலயத்தையும்
ஒரு குச்சியையும் தூக்கிக் கொண்டு
ஓடிவிடப் போகிறேன்.
குச்சி!?
குச்சியை, அதுதான் தண்டாயுதத்தைப் பற்றி
ஒரு யோசனை வருகிறது,
காட்டுக்கு வந்து சுற்றிப்பாருங்கள்
கையில் ஒரு குச்சியிருந்தால் பலம்.
ஊன்றிக் கொள்ள
வாய்க்காலில் ஆழம்பார்க்க
சிலந்திவலை கலைத்து நடக்க
துட்ட மிருகங்கள் வந்தால் மருட்ட
எல்லாவற்றுக்கும் ஒரு குச்சி போதும்.
அக்காலச் சாமியார்கள் திரிந்தது காடு
அவர்களுக்குக் குச்சி சரி.
இக்காலத்துக் காரேறு சாமிகளுக்கு
குச்சி ஏன்?
குச்சிகளில் துணிகளைக் கட்டி
துறவுச் சின்னமாய்
சுமந்து திரியும்போது
அந்த மரக்கிளை உண்மையில்
செத்துப் போகிறது.
Sunday, July 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment