Sunday, July 29, 2007

தண்டாயுதத்தைப் பற்றி

எதையும் இறக்கிவைக்க முடியவில்லை
பளு கூடிக்கொண்டே வருகிறது
என் கழுத்தும் தோள்களும் வலிக்க
சுமப்பதில் எனக்குச் சம்மதந்தான்
ஆனால் எவ்வளவு காலத்துக்கு?
தெரியாது.
என்றேனும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு
என் தண்ணீர்க் கலயத்தையும்
ஒரு குச்சியையும் தூக்கிக் கொண்டு
ஓடிவிடப் போகிறேன்.
குச்சி!?
குச்சியை, அதுதான் தண்டாயுதத்தைப் பற்றி
ஒரு யோசனை வருகிறது,
காட்டுக்கு வந்து சுற்றிப்பாருங்கள்
கையில் ஒரு குச்சியிருந்தால் பலம்.
ஊன்றிக் கொள்ள
வாய்க்காலில் ஆழம்பார்க்க
சிலந்திவலை கலைத்து நடக்க
துட்ட மிருகங்கள் வந்தால் மருட்ட
எல்லாவற்றுக்கும் ஒரு குச்சி போதும்.
அக்காலச் சாமியார்கள் திரிந்தது காடு
அவர்களுக்குக் குச்சி சரி.
இக்காலத்துக் காரேறு சாமிகளுக்கு
குச்சி ஏன்?
குச்சிகளில் துணிகளைக் கட்டி
துறவுச் சின்னமாய்
சுமந்து திரியும்போது
அந்த மரக்கிளை உண்மையில்
செத்துப் போகிறது.

Saturday, July 28, 2007

காலத்தின் பசி

பைன் மர உயரத்துக்கும்
இருந்தார்களாம் மூதாதையர்கள்
சொல்லிவைத்த இடத்தில்
கனியிருக்கும் தேனிருக்கும்
கேளிக்கைக் கூட்ட்மாகக்
கும்மரித்து இருப்பாராம்.
புத்தி வலிதாம் செயல் வலிதாம்
பெருங்கிழவி சொல்லுவாள்.
அவர்களை யாரும் இப்போது பார்த்ததில்லை
காலம் அள்ளிக்கொண்டு போனதாம்.

எங்களையும் காலம் இழுக்கப் பார்க்கும்
நான் மரங்களில் இருக்கும்போதெல்லாம்
கீழே இழுப்பதென்ன, காலம்தானே?
காலம் பொல்லாதது
கடும்பசி கொண்டது
நன்றாய்ப் பிடித்துக் கொள்ளாவிடில்
விழுத்தாட்டி உண்டுவிடும் என்று
குட்டிக் கரடிகளுக்குச் சொல்லுகிறேன்.

Wednesday, July 25, 2007

வேறென்ன?

தூரத்து மலைமுகட்டில்
பனிக்கோடு ஒளிர்கிறது
பள்ளத்தாக்குத் தரை பசிந்திருக்கிறது.
மரங்களினூடே வழியும்
கோடை வெய்யிலை
வாங்கிக் குடிக்கிறேன்.
காட்டோடு சேர்ந்து
அமைதியிலிருக்கிறேன்.
இப்போதைக்கு இதுதான்.

Tuesday, July 24, 2007

பேராறு

மலையுச்சிக்கு நடந்தேன்
குளிர்காலத்தில் கொட்டிய பனி
இன்னமும் மிச்சமாய்க் குவிந்திருந்தது
துசியும் சருகுகளும் புழுதியும் அப்பி.
அடித்த வெய்யிலில்
பனிநீர் சொட்டி
நீர்த்துளி சேர்ந்து
கசிந்தோடுகின்றது.
பேராற்றின் பிறப்பினைக் கண்டேன்.

Monday, July 23, 2007

தாகம்

காய்ந்த புற்களின் மேல்
மூச்சிறைக்க நடந்தேறுகிறேன்.
நானாடிய இடமென்ற போதும்
தேனோடிய திசையென்ற போதும்
இன்று
உயர்ந்து கடிதாயிருக்கிறது மலை.

இணைக்குரலின் துணையின்றி
இளைத்த பொழுதில்
தோள்தட்டக் கரமின்றி
மெல்ல மலைக்கிறேன் நான்.
வளர்ந்து சரிந்த பெரும்புயம்,
சிரசு, புட்டம் பெருந்தொடை
வல்லிசாய்க் கீழிழுக்கிறது புவி.

வயிற்றுத் தசையிழுபட
நாச்சுருள
சுனையைத் தேடிய தாகமொன்றே
மேலிழுக்க
மெல்ல ஏறுகிறேன் நான்.

Friday, July 20, 2007

ஈக்களின் உணவு

உட்கார்ந்திருந்தேன்
சுற்றி மொய்த்த ஈக்களை
விரட்டி விட்டேன்.

அருகிலிருந்த இன்னொரு கரடி சொன்னது:
இந்த ஈக்களும்
தேனீக்களைப் போல
தேனெடுக்கக் கற்றுக்கொண்டால்
நமக்குத் தொல்லையில்லை
இல்லையா?
நான் சொன்னேன்:
இருக்கலாம், ஆனால்
ஈக்களின் உணவைப் பற்றி
முடிவு செய்யும் உரிமை உனக்கும் எனக்கும்
இருக்கிறதா என்ன?

சைவக் கரடி யோசிக்கிறது.

Thursday, July 19, 2007

தனிமையில்

தாண்டமுடியாத எல்லைகளை நான்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
தாகமும் பசியும்
தாளவொனா வெறுமையும்
உட்படிந்த இருளும்
வந்து வந்து அறைகின்றன
காற்றில் மரங்கள் முறிகின்றன
விழுந்த மரமொன்றின்மேல் படுத்துக்கொண்டு
வானத்தைப் பார்க்கிறேன்
கானகத்தைக் காற்று இசைக்கிறது.

பெயர்ச்சி

இருளும் ஒளியும்
கலந்தடிக்கும் மலைக்காடுகளுக்குள்
மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன
புற்களும் பூண்டுகளுக்கும் கீழே இடம்
காளானுக்கும் பூச்சிகளுக்கும்,
அதனூடே ஓடித்திரியும்
விலங்குகளுக்கும்
ஈக்களுக்கும் கூட.
நாங்கள்
மாறி மாறி உண்டு
ரத்தம் குடித்து
மற்றவரால் மாய்ந்து
உயிர்த்திருக்கின்றோம்.

பெரிய பெரிய எந்திரங்கள்
வந்திருக்கின்றன.
பெரும் வண்டிகளின் முதுகில் ஏறி
அவை மலையேறி வந்து நிற்கின்றன.
பாரந்தூக்க, பள்ளம் வெட்ட
மண்ணள்ள, ஆளேற்றிப் போக.
எங்கள் மலையிறக்கத்தில்
கூட்டமாய் வந்து நிற்கின்றன.

சத்தம் கேட்கிறது
புகை வருகிறது
உட்காட்டுக்கு
மெல்ல நகர்கின்றோம்.

வாய்க்கால்

வளர்ந்த மரங்களுக்குக் கீழே
செடிகளுக்கும் பாறைகளுக்குமிடையே
சிறியதாய் ஓடிக்கொண்டிருக்கிறது
வாய்க்கால்.
தாகம் தீர்க்கும்
விழுந்து புரண்டால்
சற்றே தங்கிப் பின் ஓடும்.

நேற்றைக்குப் பள்ளத்தாக்கில்
நாய்களின் குரைப்பு
எத்தனை நாய்களோ பெருங்கூட்டம்
எல்லாமாய்ச் சேர்ந்து ஒரே குரைப்பு
மலையெங்கும் அதிர்ந்தது குரைப்பு
நான் வாய்க்கால் தண்ணீரில்
முகம் நனைக்கிறேன்.

Wednesday, July 18, 2007

இதுவும் காலையினியல்பு

கதிரோனின் வெள்ளொளி
மலை முகடுகளில்
பசிய இலைகளில்
வனத்து மரங்களில்
சின்னஞ்சிறிய பூக்களில்
காக்கைகளில்
பட்டு ஒளிர்கிறது.

நான் நடந்துகொண்டிருந்தேன்
நத்தைகள் ஊர்ந்துகொண்டிருந்தன
டொப்
அறியாது பட்டதுதானென்றாலும்
நத்தைக் கூட்டுக்கில்லை
என் பாரத்தைத் தாங்கும் வலிவு.

விடியலின் குரல்

சிவந்த கொண்டையும்
வண்ணக் கழுத்தும்
மிளிரும் இறக்கைகளும்
வலிந்த கால்களுமாய்
ஒரு சேவல்
இந்தக் காட்டுக்குள்
சுற்றிக் கொண்டிருந்தது.
காலைகளில் அது
கூவிக் கொண்டிருந்தது.
நல்ல இளசு.
சாகும் வயதில்லை.
யாரோ பிடித்துத் தின்றிருக்கவெண்டும்.

புணர்ச்சிக்குத் தவம்

பாறைக் கோடுகளை,
மழை நீரோடிக்
காய்ந்த வரிகளை,
வடிவு பலவாய்ப்
படிந்திருக்கும் மணல் திட்டுக்களை,
பறக்கும் மேகங்களை,
பெண்ணாய்,
ஆணாய்,
பிணைந்த உடலங்களாய்,
அத்தனையும் புணர்ச்சியாய்,
அப்படித்தான் பொருந்தி வருகின்றன.
நான் காத்திருக்கிறேன்.

சொல்வதை மட்டும் சொல்ல

அருகேயோடும் சிற்றோடையின்
ஊற்றுக்கண், போக்கிடம்,
அதில் கரைந்த உப்பு,
ஆவியாதல்
எல்லாவற்றையும் பேச
கரடிகளின் கூட்டம் நடந்தது.
பொன்முடிக் கரடிகள்
முடியைச் சிலுப்பி,
வழுக்கைக் கரடிகள்
தலையைத் தடவி,
இளங்கரடிகள் மாரினை அகட்டி,
மற்றும் சில தம் குறிகளைக் காட்டி.
எங்கேனும் சந்திக்க நேரும்போதெல்லாம்
ஆண் கரடிகள் ஆண்மையையும்,
பெண் கரடிகள் பெண்மையையும்
காட்டிக்கொள்கின்றன.
சொல்வதை மட்டும் சொல்ல
ஏன் யாருக்கும் தெரிவதில்லை?

சந்திப்பு

காலையில் பாதையோரத்தில்
அணிலொன்று,
சின்னஞ்சிறியது.
கொட்டையொன்றைக்
கொறித்திருந்தது.
வெய்யிலில் அதுவோர்
குழந்தையைப் போலிருந்தது.
சற்று நின்று பார்த்துவிட்டு
நான் என் வழித் தொடர்ந்தேன்.

Tuesday, July 17, 2007

இப்பொழுது இப்படியாக

மேகம் சூழ்ந்து
அமைதியாயிருக்கிறது வானம்.
துளிகளைத் தூவ
மெல்லத் திறக்கிறது
வானின் கதவு.
வீழும் துளிகளில் கிளர்கிற புழுதி
எழுகிறது பறக்கிறது,
மீண்டும் துளியொன்றில் குளித்து
மண்ணோடு படிகிறது.
என் மயிர்ச்சடையைத்
தாண்டியொரு மழைத்துளி
மெல்ல உள்ளிறங்கிச்
சிலிர்ப்பைத் தருகிறது.
பாறையொன்றில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மலைகளைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரங்கள்

மலைகளைச் சுற்றி முடித்த மாலையொன்றில்
பள்ளத்தாக்கிலிருந்த
மேளம் அதிரும் விடுதிக்குப் போனேன்.
யாரோ ஒரு இசைஞன் கொட்டியடித்தான்.
கரடிகள் ஆடின.
என் கால்களும் ஆடின.
யாரோ ஒரு கரடி உனக்கு ஆடுவது பிடிக்குமா என்றாள்.
பிடிக்காமல்?
அதுவும் உன் போன்றவொரு அழகியுடன்?

எனக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தாள்.
இப்படி ஆட்டு.
இப்படி அசை.
இப்படி உயர்த்து.
நீ ஒரு நல்ல ஆட்டக்காரன்,
உன்னை எனக்குப் பிடிக்கிறது என்றாள்.
வெளிச்சமும் இசையும் துள்ளும் மனதும்
சூழ்ந்த போதையில் ஆடும் அந்தக் கரடியை
எனக்கும் பிடித்தது.

அந்த விடுதியில் இந்தியக் கரடிகள்
மூன்று நின்றன.
வெறித்துப் பார்த்தன.
ஆட வரவில்லை.
கூச்சப் படுவதற்குப் பழக்கப் படுத்தப்பட்டவை.
இழுத்து ஆடவிட்டேன்.
திரு திருவென விழித்து
கையையும் காலையும்
மெல்ல அசைத்து
ஆடும் இடைகளையும்,
மார்புகளையும் வெறித்துக்கொண்டு
மறுபடியும் சுவற்றோடு போய் ஒட்டிக்கொண்டன.

என் இணைக்கரடி
என்னைப் பிடித்துக் கொண்டு ஆடினாள்.
தன் நண்பர்களிடம் அழைத்துப் போய்க் காட்டினாள்.
இவள் நல்ல கரடி என்றேன்.
இசைஞனின் கொட்டு முடியும்வரை
ஆடிக்கொண்டேயிருந்தோம்.
பெயரைக்கூடக் கேட்டுக்கொள்ளவில்லை,
அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுப்
பிரிந்து வந்தேன்.

மலைக்குச் செல்லும் பாதையோரத்தில்
வெகுநேரம் அமர்ந்திருந்தேன்.
குளிர்ந்து நீண்டிருந்தது மீந்திருந்த இரவு.
அமைதியாயிருந்தது மனம்.
தூரத்தில் மலைகளைத் தாண்டி
மின்னிக்கொண்டிருந்தன நட்சத்திரங்கள்.

ஒரு மலைக்கரடி வருகிறது

நான் யார்?
ஒவ்வொரு மலைக் கரடிக்குள்ளும்
இந்தக் கேள்வி ஊறிக்கொண்டிருக்கிறது.
நான் ஒரு மலைக் கரடி.
அத்தோடு நின்று போவதில்லை விடை.
மயிர் இருக்கும்.
பிறக்கும்போதிலிருந்து இருக்கிறது.
நான் சுற்றிக்கொண்டே இருப்பதாக
என் அப்பா கரடி சொன்னது.

நான் குகைகளில் வசிக்கிறேன்.
குகை இல்லாத இடங்களில்
நான் பாறைகளுக்கிடையே
படுத்துக் கொள்கிறேன்.
நான் வெளியில் வருகிறேன்.
சுற்றுகிறேன்.
கூழாங்கற்களோடு பேசிக் கொள்கிறேன்.
அவற்றுக்கு என்னைக் கொஞ்ச நாட்களாகத்தான் தெரியும்.
ஆனால் கரடிகளோடு அவை
யுகங்களாய்ச் சரசரத்திருப்பவை.
நன்கு வளர்ந்திருக்கும் கூழாங்கற்களோடு
என்னைத் தேய்த்துக் கொண்டு சரசமாடுகிறேன்.

நான் மனிதர்களிருக்கும் பள்ளத்தாக்குகளுக்கு வருகிறேன்.
என்னைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்.
அவர்களின் உணவுகள் மணமிக்கவை.
அவற்றைச் சாப்பிடக்கூடாது என்று
அம்மா சொல்லியிருந்தாலும்,
அவளும் நானுமாக இரவுகளில்
மனிதர்களின் குப்பைத் தொட்டிகளைக்
கிளறப் போகிறோம்.
இதுமட்டுமில்லை நான்.