Tuesday, July 17, 2007

மலைகளைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரங்கள்

மலைகளைச் சுற்றி முடித்த மாலையொன்றில்
பள்ளத்தாக்கிலிருந்த
மேளம் அதிரும் விடுதிக்குப் போனேன்.
யாரோ ஒரு இசைஞன் கொட்டியடித்தான்.
கரடிகள் ஆடின.
என் கால்களும் ஆடின.
யாரோ ஒரு கரடி உனக்கு ஆடுவது பிடிக்குமா என்றாள்.
பிடிக்காமல்?
அதுவும் உன் போன்றவொரு அழகியுடன்?

எனக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தாள்.
இப்படி ஆட்டு.
இப்படி அசை.
இப்படி உயர்த்து.
நீ ஒரு நல்ல ஆட்டக்காரன்,
உன்னை எனக்குப் பிடிக்கிறது என்றாள்.
வெளிச்சமும் இசையும் துள்ளும் மனதும்
சூழ்ந்த போதையில் ஆடும் அந்தக் கரடியை
எனக்கும் பிடித்தது.

அந்த விடுதியில் இந்தியக் கரடிகள்
மூன்று நின்றன.
வெறித்துப் பார்த்தன.
ஆட வரவில்லை.
கூச்சப் படுவதற்குப் பழக்கப் படுத்தப்பட்டவை.
இழுத்து ஆடவிட்டேன்.
திரு திருவென விழித்து
கையையும் காலையும்
மெல்ல அசைத்து
ஆடும் இடைகளையும்,
மார்புகளையும் வெறித்துக்கொண்டு
மறுபடியும் சுவற்றோடு போய் ஒட்டிக்கொண்டன.

என் இணைக்கரடி
என்னைப் பிடித்துக் கொண்டு ஆடினாள்.
தன் நண்பர்களிடம் அழைத்துப் போய்க் காட்டினாள்.
இவள் நல்ல கரடி என்றேன்.
இசைஞனின் கொட்டு முடியும்வரை
ஆடிக்கொண்டேயிருந்தோம்.
பெயரைக்கூடக் கேட்டுக்கொள்ளவில்லை,
அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுப்
பிரிந்து வந்தேன்.

மலைக்குச் செல்லும் பாதையோரத்தில்
வெகுநேரம் அமர்ந்திருந்தேன்.
குளிர்ந்து நீண்டிருந்தது மீந்திருந்த இரவு.
அமைதியாயிருந்தது மனம்.
தூரத்தில் மலைகளைத் தாண்டி
மின்னிக்கொண்டிருந்தன நட்சத்திரங்கள்.

0 comments: