நான் யார்?
ஒவ்வொரு மலைக் கரடிக்குள்ளும்
இந்தக் கேள்வி ஊறிக்கொண்டிருக்கிறது.
நான் ஒரு மலைக் கரடி.
அத்தோடு நின்று போவதில்லை விடை.
மயிர் இருக்கும்.
பிறக்கும்போதிலிருந்து இருக்கிறது.
நான் சுற்றிக்கொண்டே இருப்பதாக
என் அப்பா கரடி சொன்னது.
நான் குகைகளில் வசிக்கிறேன்.
குகை இல்லாத இடங்களில்
நான் பாறைகளுக்கிடையே
படுத்துக் கொள்கிறேன்.
நான் வெளியில் வருகிறேன்.
சுற்றுகிறேன்.
கூழாங்கற்களோடு பேசிக் கொள்கிறேன்.
அவற்றுக்கு என்னைக் கொஞ்ச நாட்களாகத்தான் தெரியும்.
ஆனால் கரடிகளோடு அவை
யுகங்களாய்ச் சரசரத்திருப்பவை.
நன்கு வளர்ந்திருக்கும் கூழாங்கற்களோடு
என்னைத் தேய்த்துக் கொண்டு சரசமாடுகிறேன்.
நான் மனிதர்களிருக்கும் பள்ளத்தாக்குகளுக்கு வருகிறேன்.
என்னைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்.
அவர்களின் உணவுகள் மணமிக்கவை.
அவற்றைச் சாப்பிடக்கூடாது என்று
அம்மா சொல்லியிருந்தாலும்,
அவளும் நானுமாக இரவுகளில்
மனிதர்களின் குப்பைத் தொட்டிகளைக்
கிளறப் போகிறோம்.
இதுமட்டுமில்லை நான்.
Tuesday, July 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்வரவு!
உங்கள் வரவு நல்ல வரவாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.
Post a Comment